16ம் பெற்ற பெருவாழ்வு
இது கட்டுரை எண் பதினாறு. பதினாறு என்பதை பற்றி பார்ப்பதற்கு முன் எண் என்றால் என்ன எழுத்து என்றால் என்ன என்பதைப் பற்றி சிறிய விளக்கத்தை பார்ப்போம். எண் என்பது கடவுள் எழுத்து என்பது மனித உடல். இது திருமந்திர முதல் பாடல் தொடங்கி அருட்பெருஞ்ஜோதி அகவல் வரை கூன்றி படித்தவர்களுக்கு மிக நன்கு விளங்கும். இதற்கான விளக்கத்தை நாம் முழுமையாக வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம். தற்பொழுது 16க்கு வருவோம். சன்மார்க்கத்தில் 16ஆம் நிலையை நாம் அடைந்தால் பரிபூரண நிலையை அடைந்து விட்டதாக அர்த்தம். நமக்கு பதினாறு பேறுகள் தேவையில்லை. நமக்கு தேவை 16ஆம் நிலை. திருவருட்பாவில் வள்ளலார் இதனை பல பாடல்களில் வலியுறுத்தி உள்ளார். இப்பொழுது பதினாறாம் நிலையை பார்ப்பதற்கு முன் சந்திரனின் நிலையை, அதன் கலையை பற்றி நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
சந்திரன் என்பது மதி.
மதி என்பது அறிவு.
அறிவு என்பது ஞானம்.
பூரணச்சந்திரன் பூரண ஞானம்.
ஞான மயமாய் விளங்கும் வெண்ணிலாவே
என்னை நான் அறிய சொல்லு கண்டாய் வெண்ணிலாவே -- இதுவே வள்ளலார் பாட்டு. சந்திரனை வைத்துத்தான் நாம் இந்த 16ஆவது நிலையைப் பற்றி அறிந்து தெரிந்து மேலே ஏற முடியும். சரி வரிசையாக பார்ப்போம்.
1) முதல் நிலை - அமாவாசை - சரியையில் சரியை -- ஞான சூனியம் - இறைவனை சிலைவடிவில் பக்தியோடு வணங்கி பண்டாரமாய் திரிவது.
2) இரண்டாம் நிலை -- பிரதமை -- சரியையில் கிரியை
3) மூன்றாம் நிலை -- துவிதியை -- சரியையில் யோகம்
4) நான்காம் நிலை -- திருதியை -- சரியையில் ஞானம்
5) ஐந்தாம் நிலை -- சதுர்த்தி -- கிரியையில் சரியை
6) ஆறாம் நிலை -- பஞ்சமி -- கிரியையில் கிரியை
7) ஏழாம் நிலை -- சஷ்டி -- கிரியையில் யோகம்
8) எட்டாம் நிலை -- சப்தமி -- கிரியையில் ஞானம்
9) ஒன்பதாம் நிலை -- அஷ்டமி -- யோகத்தில் சரியை
10) பத்தாம் நிலை -- நவமி -- யோகத்தில் கிரியை
11) பதினொன்றாம் நிலை -- தசமி -- யோகத்தில் யோகம்
12) பன்னிரெண்டாம் நிலை -- ஏகாதசி -- யோகத்தில் ஞானம்
13) பதிமூன்றாம் நிலை -- துவாதசி -- ஞானத்தில் சரியை
14) பதினான்காம் நிலை -- திரையோதசி -- ஞானத்தில் கிரியை
15) பதினைந்தாம் நிலை -- சதுர்த்தசி -- ஞானத்தில் யோகம்
16) பதினாறாம் நிலை -- பவுர்ணமி -- ஞானத்தில் ஞானம் -- பரிபூரண நிலை.
இங்கே சிலர் குழம்புவதற்கு வாய்ப்பு உள்ளது. 0 = 1 என ஆரம்பித்தோம். 15 = 16 என முடித்துள்ளோம். எனவே குழம்ப வேண்டாம். இது மனித உடலிலும், மனிதரின் மனதிலும், ஒரு சக்கரமாக சுழன்று கொண்டே இருக்கும். இப்படி ஏறி ஏறி இறங்கி சுழன்று கொண்டே இருக்காமல் ஞானத்தில் பரிபூரணம் ஆவதே சன்மார்க்கம் .
நன்னாலும் (4×4 =16)கடந்தே ஒளிர் ஞான சபாபதியே
பொன்னாரும் சபையாய் அருள் பூரண புண்ணியனே
என்னால் ஆவது ஒன்றும் உனக்கு இல்லை எனினும் என் தாய்
உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மையை உரைத்து அருளே
-- இது வள்ளலார் பாட்டு.
அருட்பெருஞ்ஜோதி வணக்கம்.
-- தில்லை திருமா வளவன்
கீழேயுள்ள போட்டோவில் மாத பூச அட்டவணை உள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடுத்த பூசம்
3/9/2021
நல்லதொரு விளக்கம். நன்றி ஐயா
ReplyDelete