சன்மார்க்கம் என்றால் ஒன்றும் இல்லாதது. வெட்ட வெளியாக இருப்பது. ஏதாவது ஒன்று இருக்கிறது என்று சொன்னால் அது சன்மார்க்கம் இல்லை. சரி வள்ளலார் சன்மார்க்கியா அல்லது சமயவாதியா? என்று கேட்டால் அவர் சன்மார்க்கி என்றுதான் சொல்ல வேண்டும். அவர் சமயவாதி இல்லை என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன.
ஆதாரங்கள்
1) அவர் சமயவாதியை போல் தன்னை வெளிக்காட்டி கொள்ளவில்லை.
2) சமயவாதிகளை போல் அவர் காவி அணியவில்லை.
3) சமயவாதிகளை போல் வேஷம் கட்டிக் கொள்ளவில்லை.
4) சமயவாதிகளை போல் யாருக்கும் தீட்சை கொடுக்கவில்லை. யாரிடமும் தீட்சை வாங்கவில்லை.
5) தன்னிடம் சில கஷ்டங்களை சொன்னவர்களுக்கு அந்தக் கஷ்டத்தை நிவர்த்தி செய்வதற்கு ஜீவகாருண்யத்தையும், தீப வழிபாட்டையும் வலியுறுத்தி அவர்களது கஷ்டத்தை போக்கினார். சமயவாதிகளை போல நீ அந்த சேத்திரத்துக்கு போனால் அது சரியாகிவிடும், இந்தக் கோயிலுக்கு போனால் இது சரியாகிவிடும், இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் பாவம் போய்விடும், அந்த தீர்த்தத்தில் நீராடினால் புண்ணியம் பெருகும் என்றெல்லாம் சமயவாதிகளை போல அவர் பிரசங்கம் செய்யவில்லை.
6) ஆன்ம லாபத்திற்கு வழிகாட்டினாரே தவிர, சமயவாதிகளை போல ஆதாய லாபத்திற்கு அவர் வழிகாட்டவில்லை.
7) தான் இறைவனுடன் ஐக்கியமாவதற்கு முன் ஒன்றரை வருடமாக கடவுள் ஒருவரே என்றும் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் பிரசங்கம் செய்து வந்தார். ஆன்ம லாபம் பெறுவதற்கு எந்த சமய கடவுளையோ அல்லது எந்த ஷேத்திரத்தையோ சுட்டிக்காட்டி அதனைப் பின்பற்ற சொல்லவில்லை. அதுமட்டுமல்லாமல் எந்த சமயத்தையும் அவர் ஆதரிக்கவில்லை.
இது போல் இன்னும் பல ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அது விரிக்கில் பெருகும். எனவே வள்ளலார் கூறியது போல் நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அந்த எல்லாம் வல்ல இறைவனை பற்றி கொள்வோம்.
தில்லை திருமாவளவன்.