Sunday 16 December 2018

எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்


வள்ளலார் எழுதிய திருவருட்பா

பாடியவர் : திருமாவளவன்

பக்கவாத்தியம் : இராஜாராமன் ஐயர்

https://youtu.be/C60t3W7yTUw


 கட்டுரை 8
 வள்ளலாரும் மாணிக்கவாசகரும்

வள்ளலார் மாணிக்கவாசகர் மேல் மிகுந்த அன்பு பாராட்டியவர்.  ஏனென்றால் மாணிக்கவாசகர் சரியை கிரியை யோகம் ஞானம் இதில் ஞானத்தை வலியுறுத்தியவர் மாணிக்கவாசகர். 

 சரியை  -- தாச மார்க்கம்   --  அப்பர்
 கிரியை  - சற்புத்திர மார்க்கம்  - சம்பந்தர்
 யோகம்  - சகமார்க்கம் - சுந்தரர்
 ஞானம்  - சன்மார்க்கம்  - மணிவாசகர்

 சன்மார்க்கம் என்பது இறைவனை மனைவியாகவோ அல்லது கணவராகவோ நினைத்து வழிபடுவது.  கணவன் மனைவி உறவு என்பது இருவரும் ஐக்கியமாகி ஒரே நிலையில் நிற்பது.  ஆண்டானும் அடிமையும் தனித்தனியாக நிற்பார்கள்.  அப்பாவும் பிள்ளையும் தனித்தனியாக நிற்பார்கள்.  நண்பர்கள் தனித்தனியாக நிற்பார்கள்.  ஆனால் கணவன்-மனைவி ஒன்றாக இணைந்து இருப்பார்கள்.  இதுதான் சன்மார்க்கம்.

 மாணிக்கவாசகரும் வள்ளலாரைப் போலவே ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் என்று கூறுகிறார்.

 யானே பொய் என் நெஞ்சும்
 பொய் என் அன்பும் பொய்
 ஆனால் வினையேன் அழுதால்
 உன்னைப் பெறலாமே
 தேனே அமுதே கரும்பின்
 தெளிவே தித்திக்கும்
 மானே அருளாய் அடியேன்
 உனை வந்து உறுமாரே

 இதைப் படித்தால் இது திருவாசகமா அல்லது திருவருட்பாவா என்ற ஐயம் நமக்குள்ளே ஏற்படும்.

 வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

 இப்படியெல்லாம் இறைவனை புகழ்ந்த மாணிக்கவாசகரை கீழ் கண்டவாறு வள்ளலார் புகழ்ந்து பாடுகின்றார்.

 வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
 நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
 தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

 மாணிக்கவாசகரின் தத்துவத்தை நாம் மருவி பாடுவோம் நல்ல கதி அடைவோம்.


 வள்ளலாரும் சன்மார்க்கமும்

 கட்டுரை 9



 திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கம் என்று ஒரு சங்கத்தை நிறுவி நடத்தி வருகின்றார்.  நானே சன்மார்க்கத்தை நடுவிலிருந்து நடத்துகின்றேன் என்று உறுதி அளித்துள்ளார்.  சரி வள்ளலாரே சன்மார்க்கத்தை நடத்துகின்றார் என்று கூறிவிட்டு நாம் எல்லாம் சோம்பலாக இருக்கக்கூடாது.  ஒவ்வொரு நாளும் நம்மால் இயன்ற அளவு சன்மார்க்கம் சார்ந்த செயல்கள் ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும்.  இந்த உலகத்திலே இரக்கத்தோடு இருக்கும் எவரும் சன்மார்க்கம் சார்ந்தவரே என்று வள்ளல் பெருமான் கூறியுள்ளார்.  ஒருவர் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தேசத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் இரக்க குணம் என்று ஒன்று மட்டும் இருந்துவிட்டால் போதும் சன்மார்க்கம் சார்ந்தவராக இருப்பார்.  இதில் ஐயமில்லை.  சன்மார்க்கம் என்பது ஏதோ ஒரு சமயத்துக்கு மட்டும் சார்ந்தது என்று சிலர் கூறிக் கொண்டிருக்கின்றார்கள் அது முழுக்க முழுக்க தவறான கருத்து. 

 ஒருவர் ஒரு நாளைக்கு ஏதோ ஒரு ஏழைக்கு உதவி செய்கின்றார் என்றால் நல்லது.  ஒருவர் ஒருநாளைக்கு உலகத்தில் உள்ள ஏழைகள் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னால் நல்லது.  ஒருவர் ஒருநாளைக்கு எரிகின்ற தீபத்தில் எண்ணெய் ஊற்றினால் நல்லது.  ஒருவர் ஒருநாளைக்கு இந்த உடம்பைப் பற்றியும் ஆண்டவரைப் பற்றியும் சத்விசாரம் செய்தால் நல்லது.  இது போன்று பல சன்மார்க்க செயல்கள் இருக்கின்றது அவற்றில் ஏதேனும் ஒன்றை செய்து கொண்டு வந்தால் மிகவும் நல்லது.

 யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
 யாவர்க்குமாம் பசுவுக்கு ஒருவாய் அருகு
 யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
 யாவர்க்குமாம் ஓர் இன்னுரை தானே
-- இது திருமூலர் வாக்கு.

 இப்பொழுது சன்மார்க்கம் விளங்கும் காலம்.  ஊருக்கு ஊர் இப்பொழுது சன்மார்க்க சங்கங்கள் செயல்பட துவங்கிவிட்டன.  இது தெருவுக்குத் தெரு மாற வேண்டும்.  வீடுகள்தோறும் விதி நெறி விளங்க ஆடல் செய்து அருளும் அருட்பெருஞ்ஜோதி என்று வள்ளலார் பாடுகின்றார்.  நீங்கள் நடந்து செல்லும் பாதையில் ஒரு ஓரத்தில் ஒருவர் அன்னதானம் செய்து கொண்டிருப்பார், ஒரு இடத்தில் வள்ளலார் படத்தை வைத்து பாடிக் கொண்டிருப்பார்கள், ஓரிடத்தில் வள்ளலார் பெயரில் சத்சங்கம் நடந்துகொண்டிருக்கும், இதுபோன்ற நிகழ்வுகளை பார்க்கும் பொழுது அவற்றை சாதாரணமாக கடந்து சென்று விடாதீர்கள்.  அந்த இடம் மிகவும் முக்கியமான இடம்.  அருள் விளங்கும் இடம்.  அங்குள்ள நிர்வாகத்தில் சில பல பிரச்சனைகள் தவறுகள் இருக்கலாம்.  ஆனால் அவற்றை பெரிதுபடுத்தாமல் இந்த செயல்களில் ஈடுபட்டவர்களை வணங்கி வாழ்த்த வேண்டும். 

 இரண்டு ஆண்டுகளாக இந்த வைரஸ் நோய் பிரச்சனையால் உலகம் முழுவதும் அனைத்து சாதி மத இன கோயில்கள் முழுவதும் நடை சாத்தப்பட்டது.  ஆனால் சன்மார்க்க சங்கங்கள் மூடப்படவில்லை.  சன்மார்க்கிகள் தங்கள் மனதை எப்பொழுதும் திறந்து வைத்துக் கொண்டே இருந்தார்கள்.  அவர்களுடைய செயல்பாட்டினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.  இந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற நிகழ்வுகளை கோரக்கர் சித்தர் தனது பாடலில் பதிவு செய்து வைத்துள்ளார்.  அதில் சங்கங்கள் அமைத்து இறைவனை உண்மை வழிபாடு செய்வார்கள் என்று சன்மார்க்கி களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

 சன்மார்க்க சபையில் என்னை தனிக்க வைத்த தெய்வம்  இன்று வள்ளலார் பாடுகின்றார்.  ஆம்.  முழுமையான சன்மார்க்கத்தை அடைவதற்காக தான் நாமெல்லாம் இந்த செயல்களை செய்து கொண்டிருக்கின்றோம்.  சன்மார்க்கம் என்பது நமது உடம்புக்கு உள்ளே நடப்பது.  நம் உடம்புக்குள்ளேயே இது சரியாக நடக்க வேண்டும் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் நாம் சமமாக பாவித்து பழக வேண்டும்.

 கட்டுரை 10

 மூன்றாவது கண் சிவனுக்கு மட்டும்தானா?

எவ்வகையிலாவது தக்க ஆசாரியரை கொண்டு சீக்கிரத்தில் மூன்றாவது கண்ணை திறந்து கொள்ள வேண்டும்.  அப்படி திறந்து கொண்டால் அவனுக்கு பட்டப்பகல் வெட்டவெளிச்சமாக எல்லாம் புரியும், இன்று திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் நமக்கு தெரிவித்துள்ளார்.
 சிவபெருமான் புராணக் கதையில் உள்ள மூன்றாவது கண்ணுக்கும் வள்ளலார் கூறிய இந்த மூன்றாவது கண்ணுக்கும் தொடர்பு இருக்கிறதா?  இருக்கிறது.  அது தத்துவத்தைச் சொன்னது.  இது உண்மையைச் சொன்னது.

 தத்துவத்தில் சொல்லப்பட்ட மூன்றாவது கண் திறந்த பொழுது முருகப்பெருமான் பிறக்கிறான், மன்மதன் எரிக்கப் படுகிறான், நக்கீரர் எரிக்கப் படுகிறார்.  ஆக மூன்றாவது கண் திறந்து கொண்டால் ஐந்தொழிலையும் செய்யும் சித்தி நமக்கு கிடைக்கும் என்பது புரிகிறது.  மேலும் மூன்றாவது கண்ணை திறந்து கொண்டபிறகு எந்தவிதமான தவமோ அல்லது பாராயணம் செய்வதோ அல்லது எந்தவிதமான பிரயாசை எடுத்துக் கொண்டு எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

 சிவபெருமானுக்கு மட்டுமல்ல, சிங்கப்பெருமாள் கோயில் உள்ள நரசிங்கப் பெருமாளுக்கும் மூன்றாவது கண் உள்ளது.   தேங்காயில் கூட மூன்றாவது கண் உள்ளது.  வள்ளலார் உரைநடையில் மிகத்தெளிவாக கூறியுள்ள விஷயம் என்னவென்றால் இறைவன் மற்றும் சமயத்தில் உள்ள தெய்வங்கள் எல்லாம் ஒவ்வொரு தத்துவங்களாக நமது உடலில் ஒவ்வொரு பாகத்திலும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.  இதைத்தான் பேருபதேசத்தில், பிண்டத்தில் உள்ளதை அண்டத்தில் காட்டினார்கள் ( நம்மை ஏமாற்றிய சித்தர்கள்) என்றார் வள்ளலார்.

 அதுபோல் முக்கண் என்று சொல்வது முழுக்க முழுக்க மனிதரிடத்தில் இருப்பதுதான்.  கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லியவாறு தக்க  ஆசாரியரை கொண்டு எங்கனம் மூன்றாவது கண்ணை திறந்து கொள்ள முடியும்?  ஆச்சாரியார்களை தேடி அலைய முடியாது.  தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.  அண்ட சராசரங்களுக்கும் அப்பாலுள்ள இறைவன் இந்த சாதாரண உடலில் காரியப் படுவது போல்,  தக்க ஆச்சாரியன் மட்டும் இந்த உடலில் இல்லாமல் வெளியிலா இருப்பான்?  எல்லாமே இந்த உடலில் அடக்கம்.  ஏன் இங்கிருந்துதான் நாம் அனைவரையும் தேடவேண்டும், தரிசிக்க வேண்டும்.  வள்ளலாரே நம் உடம்பில் தான் உள்ளார்.  ஒவ்வொன்றும் தக்க அனுபவத்தில் வெளிப்படும்.

 மூன்றாவது கண் திறந்து கொண்டவர்களுக்கு பசி எடுக்காது. தாகம் எடுக்காது.  உடல் சோர்வு ஏற்படாது.  தூக்கம் வராது.  அதையும் மீறி யாராவது சாப்பிடுவதற்கு கட்டாயப்படுத்தினாலோ அல்லது தண்ணீர் அருந்த சொன்னாலோ அவ்வாறு சாப்பிடும் சாப்பாடு மற்றும் தண்ணீர் உடலுக்குள் சென்ற அந்த நிமிஷமே செரித்து ஆவியாகிவிடும்.  அவர்களுக்கு மலஜல உபாதை கிடையாது.

 இந்த மூன்றாவது கண்ணை திறந்து கொள்வதற்கு அடிப்படையாக இருப்பது புருவமத்தியில் நினைவை செலுத்த வேண்டும் என்று சொல்லப்பட்ட சகஜ நிஷட்டையே ஆகும்.

 கட்டுரை 11

 நடுவை நாடுங்கள்

இந்த உலகத்திற்கே ஒரு நடுவு மையம் உள்ளது.  அது என்ன?  எங்கே இருக்கிறது?

 இந்த உலகின் நடு மையம் அந்தந்த மனிதர்களின் நடுவாக விளங்குகின்றது.  இது தெரியாமல் பலர் பெரிய விஞ்ஞானிகளைப் போல உலகத்துக்கே நடுவானது  இந்தக் கோயில் அந்த கோயில் இன்று பல பலவாக பேசி கடைசியில் சிலர் வடலூரையும் விட்டுவைக்கவில்லை. வடலூர் தான் நடு மையம் என்றும் கூறுகிறார்கள்.

 உண்மையில் ஒவ்வொருவருடைய உடலின் நடுப்பகுதியே இந்த உலகின் மையமாக விளங்கும்.  இதுதான் உண்மையான நடு.

 நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
-- என்று வள்ளலார் ஒவ்வொரு மனித தேகம் எடுத்த மனிதர்களைப் பார்த்து கூறுகின்றார்.

 நாம் எப்பொழுதும்  நடுவு நிலையிலேயே இருக்க வேண்டும்.  நடுநிலையில் எப்படி நாம் இருக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் கருணை, தயவு வேண்டும்.

 நடு நிலை இல்லா கூட்டத்தை கருணை நண்ணிடா  என்கின்றார் வள்ளலார்.

 திருவள்ளுவர் நடுவு நிலைமை என்று ஒரு அதிகாரத்தையே பாடியிருக்கின்றார்.

 திருமூலர் நடுவு நிலைமை என்ற தலைப்பின் கீழ் நான்கு பாடல்களை பாடியிருக்கின்றார்.  அதில் ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

 நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
 நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை
 நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர்
 நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே

 மேலே சொல்லப்பட்ட நடு என்பதும் திருச்சிற்றம்பலம் என்பதும் சிற்றம்பலம் என்பதும் புருவமத்தி என்பதும் இது போன்று பல வாராய் அறிவிக்கப்பட்ட ரகசியங்களும் ஒரே பொருள் தான்.

 கட்டுரை 12

திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் ஆரம்ப காலத்திலிருந்து சித்தர்களால் வழிநடத்தப்பட்ட சித்தர் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒரு மகான் ஆவார்.  அவர் முத்தர் எல்லாம் போற்றும் அருட்சித்தர் மகன் நானே என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கின்றார்.  அவருடைய வரலாற்றை படித்துப் பார்த்தால் அதில் பல சித்தர்களோடு தொடர்பு உடையதாக இருப்பது தெரியவரும்.  அவர் கருவுற்றதும் ஒரு சித்தரின் அனுக்கிரகத்தால் தான்.

 பரிபாஷை என்பது சித்தர்களால் பாடப்பட்ட சில ரகசிய குறியீடுகள்.  இதை ஆங்கிலத்தில் code என்று சொல்வார்கள்.  அதற்கு விடை decode என்பதாகும்.  பாமர மக்கள் இதை வெடி என்று சொல்வார்கள்.  ஒருவர் ஒரு வெடி போடுவார் அதற்கு மற்றவர் பதில் சொல்ல வேண்டும்.  அதற்கு வெடியை வெடித்தல் என்று பெயர்.  இந்தப் பழக்கம் தமிழ்நாட்டில் இன்றளவும் கிராமங்களில் புழங்கி வருகின்றது. 

 திருவருட்பாவில் சொல்லப்பட்ட பரிபாஷைகள் முழுவதும் அதிலேயே பதில் இருப்பதாக அமைந்துள்ளது.  சில பதில்கள் அடுத்த வரியிலேயே வரலாம்.  சில பதில்கள் அடுத்த பாடலில் வரலாம்.  சில பதில்கள் வேறொரு பதிகத்தில் இருக்கலாம்.  அதனை நாம் தான் கூர்ந்து நோக்கி தெரிந்து கொள்ள வேண்டும்.

8, 2
 வாசி
 வெண்ணிலா
 மயில், குயில்
 சிற்சபை, பொற்சபை, ஞான சபை, சபை
 நடம், நடனம், நடராஜர்
 சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்
 நமச்சிவாய
 சிவாய நம
இன்னும் இது போல் எத்தனையோ பரிபாஷைகளை வள்ளலார் கூறியுள்ளார்.  இதுவே வள்ளலார் சித்தர் மரபில் வந்தவர் என்பதற்கான ஆதாரம்.

 உதாரணத்திற்கு ஒரு பாடலை எடுத்துக் கொண்டு அதில் வள்ளலார் பரிபாஷையும் அதற்கு விளக்கத்தையும் கொடுத்திருப்பதை நாம் பார்ப்போம்.

 சாகாத தலை அறியேன் வேகாத காலின்
 தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
 ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும்
அறியேன் மெய்ந் நெறிதனை ஓர் அணுவளவும் அறியேன்

 இது பாடலின் முதல் நான்கு அடிகள்.

 சாகாத தலை = ஆகாய நிலை
 வேகாத கால் = மாகாய நிலை ( காற்று)
 போகாத புனல் = மெய்ந் நெறி
 இங்கே  மெய்ந் நெறி என்பது ஒழுக்க நெறி.  அதாவது விந்துவை வெளியிடாது நிற்கும் ஒழுக்க நெறி.

 இதுபோல் எல்லா பாடல்களையும் பொருத்திப் பார்க்க முடியாது. 
 இதை கிராமத்தில், காயும் கோணக்கா கொல்லுடா மச்சான், வெடியும் வெடித்து விட்டேன் சொல்லுடா மச்சான் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.

 இங்கே முழுமையான விளக்கத்தை தரமுடியாத நிலையில் இவற்றை குருமுகமாக அறிந்து கொள்ளுவது நல்லது.

 அகத்தியர் சித்தர் தான் எழுதிய அகத்தியர் பரிபாஷை திரட்டு 500 என்ற நூலில், பல பரிபாஷையை கூறி அதற்கு  விடையாக 25, 50 பொருள்களை கூறுவார்.  இதில் எந்த பொருள் நமக்கு சரியாக தெரிகிறதோ அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அதன் உட்பொருள்.  அவரே இந்தப் புத்தகத்தை நிகண்டு என பலர் சொல்லுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.  அதைப்போலத்தான் வள்ளலார் கூறும் பரிபாசைகளுக்கு அவரவர் பக்குவத்திற்கு ஏற்றவாறு எந்த பொருள் தோன்றுகிறதோ அதை எடுத்துக்கொண்டு நமது அடுத்த பயணத்தை நோக்கி நகர வேண்டும்.  இது ஒவ்வொருவருக்கும் அவரவரின் அனுபவத்தின் கண் மாறுபட்டு நிற்கும். 


 இது தொடர்பான விரிவான விளக்கத்தை பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்

 கட்டுரை 13

 திருவடி ரகசியம்

திருவடி என்பது ஒரு ரகசிய பொருளாக பன்னெடுங்காலமாக பெரியவர்களால் கூறப்பட்டு வருகிறது.  இதில் சமயம் தொடங்கி சன்மார்க்கம் வரை திருவடி என்பது எவ்வாறு கூறப்பட்டு வருகிறது என்பதை பார்ப்போம்.  வைணவ சமயத்தில் திருவடியை இரண்டு பிரிவுகளாக கூறுகின்றனர்.  அவை சிறிய திருவடி என்றும் பெரிய திருவடி என்றும் வழங்கப்படுகிறது.  சிறிய திருவடி என்பது அனுமன்.  பெரிய திருவடி என்பது கருடன்.  இவை இரண்டுமே நம் உடலில் உள்ள ஒரு தத்துவம்.  இரண்டுமே காற்றோடு தொடர்புடையது.  இதே வைணவ சமயத்தில் மகாபலி சக்கரவர்த்தி என்று ஒரு புராணக்கதை உண்டு.  வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தி மூன்றடி மண் கேட்க ஒருஅடி மண்ணையும் மற்றோர் அடியால் விண்ணையும் அளந்து நிற்க மூன்றாவது அடி எங்கே வைக்க என்று கேட்க தனது தலையை மகாபலி சக்கரவர்த்தி திருவடி வைக்க கேட்பதாக கூறப்படுவதும் உண்டு.  இதுவும் திருவடியைப் பற்றிய ஒரு ரகசிய செய்தியாகும்.  சைவ சமயத்தை எடுத்துக்கொண்டால் நடராஜரின் தூக்கிய திருவடியே இங்கே முக்கியமானதாக கருதப்படுகிறது.   இடதுகால் இராட்சதனின் மேல் அழுத்தி இருக்க வலது காலை தூக்கி வேகமாக நடனமாடி நிற்கும் நிலையில் இருப்பது திருவடியை பற்றிய ஒரு ரகசிய செய்தியாகும்.  மேலும் இதே சைவ சமயத்தில் மார்க்கண்டேயனுக்காக தனது இடது காலால் எமனை உதைத்தது அனைவரும் அறிந்த கதையாகும்.  இதுவும் திருவடியைப் பற்றிய ஒரு ரகசிய குறிப்பாகும்.  இந்த பூமி இறைவனின் திருவடி,  இந்த ஆகாயம் இறைவனின் திருமுடி என்றார் கிறிஸ்தவ சமய வேதாந்த ஞானி இயேசுநாதர்.  புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது மங்களம் உண்டாகும் பொருட்டு வலது காலை எடுத்து வைத்து செல்வது ஒரு பழக்கமாக தமிழர்களிடம் இருந்துள்ளது.  மணமகளே மணமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா என்பது கவிஞனின் பாட்டு.  இதில் சொல்லப்படும் வலதுகால் மூச்சு சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாக கூறப்பட்டது.  வள்ளலாரும் வலது நாசியில் எப்போதும் மூச்சு விட்டு இருப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சொல்கின்றார்.  இதனால்தான் இரவில் படுக்கும்போது இடதுகைப் பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று கூறுவார்.  இதனை யோகநித்திரை என்று சித்தர்கள் கூறுவர்.  மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலால் எழுப்பும் கருத்தறி வித்தே என்பது அவ்வையார் பாடல்.  இப்படியாக இறைவனின் திருவடியை பெற்றவர்கள்தான் அடியார்கள் என்றும் அடிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். திருவள்ளுவர் தனது பாயிரத்தில் உள்ள முதல் பத்து பாடல்களில் ஏழு பாடல்களில் திருவடியின் பெருமையை கூறுகிறார்.   திருமூலர் திருமந்திரத்தில் திருவடிகளைப் பற்றி ஏராளமான பாடல்கள் பாடப்பட்டுள்ளது.  சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் 27 முறை இறைவனின் திருவடிகளை பாராட்டி மகிழ்கிறார். வள்ளலாரும் திருவடிப்புகழ்ச்சி, திருவடிப் பெருமை என திருவடிகளைப் பற்றி நிறைய பாடல்கள் பாடியிருக்கின்றார்.  பல சித்தர்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள இந்த முழு உடலையே திருவடி என கூறியிருக்கின்றனர்.  திரு என்றால் உடல் என்றும் ஒரு பொருள் உண்டு.  எனவே நமது இந்த உடலே ஆண்டவனின் திருவடி என கருத வேண்டும்.  இந்த உடலை ஒழுக்கத்தோடு காப்பாற்றிக் கொள்வதே இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்.

 வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி
 வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம்
 வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத் தவன் தாள் 
 வாழ்கவே வாழ்க மல மிலான் பாதமே
-- திருமூலர் திருமந்திரம் கடைசி பாடல்.

 14

ஏற்கனவே நாம் சிந்தனை செய் மனமே என்ற தலைப்பில் ஒரு சத்
விசாரணை பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகம் கட்டுரை வெளியிடப்படுகிறது 

இறை சிந்தனையை நமக்கு ஏற்படுத்தாமல் தடுக்கக்கூடிய மலங்கள் முக்கியமாக மூன்று உள்ளது.  அவை ஆணவம் கன்மம் மாயை.  இந்த மூன்று மலங்களுள் கன்மம்  என்ற மாயைதான் முக்கியமாக நமது சிந்தனையை கபளீகரம் செய்யக்கூடிய ஒன்றாகும்.  இந்த கன்மத்திற்கு கர்மம் (கருமம் ) என்றும் ஒரு பெயர் உண்டு.


 நாம் குழந்தையாக பிறந்ததில் இருந்து வளர வளர நிறைய வேலைகளை செய்து கொண்டே இருக்கின்றோம்.  இந்த வேலைகளில் தான் நமது முழு கவனமும் இருந்து வருகிறது.  படிக்கின்ற காலத்திலேயே படிப்பே நமக்கு மிகப்பெரிய கர்மமாக இருக்கிறது.  நமது கவனம் முழுவதும் படிப்பிலேயே செலுத்தி அதில் வெற்றி பெற்றிருக்கின்றோம்.  அதற்குப் பிறகு வேலை தேடும் படலம்.  வேலை கிடைத்தவுடன்,  அதில் முழுமூச்சாக இறங்கி சதா அதே நினைவுடனே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  இங்கே முழுவதுமாக இறை சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது.  இந்த மாதிரி நிலையில் சமயவாதிகள் தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு நம்மை சுலபமாக வீழ்த்தி விடுகின்றார்கள்.  ஏதோ கோயிலுக்கு போனோமா அர்ச்சனை செய்தோமா என்று இதிலேயே நமக்கு அருள் கிடைத்து விடும் என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம். இது உண்மையான வழிபாடு ஆகாது.  உண்மையான வழிபாடு என்பது, நான் யார்? என்னை படைத்த கடவுள் யார்? எங்கே இருக்கிறார்? எப்படி செயல்படுகின்றார்? என்று ஆண்டவருடைய சொரூப ரூப சுபாவங்களை தெரிந்து கொள்வதே உண்மை வழிபாடாகும்.  இதற்கெல்லாம் முக்கிய தடையாக இருப்பது கருமம்.  எனவேதான் திருமூலர்


 வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர் -- என்று சொல்கிறார்.


 இறைவனை நினைப்பதையே சதாசர்வகாலமும் தொழிலாகக் கொள்ள வேண்டும் என வள்ளலார் கூறுகின்றார்.  அதை உணர்த்தும் பொருட்டு கீழ்க்கண்ட பாடலைப் பாடுகின்றார் :


 காடுவெட்டி நிலம் திருத்திக் காட்டு எருவும்  போட்டுக்

 கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர்

 கூடுவிட்டு போயினபின் எதுபுரிவீர் இங்கே

 குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்தறியீர் இங்கே

 பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் கழித்தீர்

 பட்டதெல்லாம் போதும் இது பரமர் வரு தருணம்

 ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப்பெறுவீர்

 எண்மை உரைத்தேன் அலன் நான் உண்மை வைத்தேனே.


 வேலையை சிந்தித்துக் கொண்டு இருப்பவனுக்கு வேலை கிடைத்துவிடும்.


 பணத்தை சிந்தித்துக் கொண்டு இருப்பவனுக்கு பணம் கிடைத்துவிடும்.


 காதலியை சிந்தித்துக் கொண்டிருப் பவனுக்கு காதலி கிடைத்து விடுவாள்.


 வீட்டைக் கட்டி முடிக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டு இருப்பவனுக்கு வீடு கிடைத்துவிடும்.


 மரணத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பவனுக்கு மரணம் வந்துவிடும்.


 கடவுளைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பவனுக்கு கடவுள் கிடைத்து விடுவார்.


 எதை நினைக்கின்றோமோ அதுவே கிடைத்து விடுகின்றது.  சிந்தை என்ற ஒன்றே தெய்வம் ஆகிவிட்டால் சிந்தித்துக் கொண்டிருப்பவனே தெய்வமாகி விடுகின்றான்.


 எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்தருள் அருட்பெருஞ்ஜோதி 


 தீவினை அகன்றிட கன்மத்தை விட்டு இறைவனை சிந்தை செய்வோம் புதியதோர் சன்மார்க்க உலகம் படைப்போம் 



No comments:

Post a Comment